[ No Description ]
“என்னடீது? நீயும் வந்திட்டியே! அவன்கூட யார் இருக்காங்க?”
“பொறுப்பானவங்களை உட்கார வச்சிட்டுத்தான் வந்திருக்கேன். நீ கவலைப்படாதே! எனக்கு தலைவலியா இருக்கு. காபி குடு! அக்கா எங்கே?”
“மாடில இருக்கா!”
“நீ வா! உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்!”
“இரு! வர்றேன்!” அம்மா காபியுடன் வந்து எதிரே உட்கார்ந்து கொண்டாள்.
“ஏன்மா? டாக்டர் ஏதாச்சும் சொன்னாரா? பிரச்னை எதுவும் இல்லையே?”
“உன்பிள்ளை பூரணமான ஆரோக்யத்தோட இருக்கான்!”
“வேற என்ன? பணப் பிரச்சனையா?”
வந்தனா அம்மாவை ஆழமாகப் பார்த்தாள்.
“அது இனிமேலதான் வரப்போகுது நமக்கு!”
“புரியும்படியா பேசுடி!”
“அம்மா நீ அதிர்ச்சி அடையாதே! பொறுமையாக் கேட்டுக்கோ! நேரடியா நான் விஷயத்துக்கு வர்றேன்!”
அம்மா முகத்தில கலவரம்.
'என்ன சொல்லப் போகிறோள் இவள்?’
வந்தனா டாக்டர் சொன்னது - அந்த நீரஜாவின் அப்பா பேசியது... நீரஜாவின் விளக்கம் எல்லாம் சொன்னாள்.
அண்ணனின் எதிர்பார்ப்பையும் சொல்லிவிட்டாள்.
“உனக்கு வெக்கமால்ல?”
“இதுல நான் வெக்கப்பட என்னம்மா இருக்கு?”
“எங்க குடும்பத்துல மூத்தவன் அவன். எங்களை விட்டுட்டு அவனுக்காக ஒரு வாழ்க்கை அமைச்சுக்க முடியாதுனு அந்த பெரிய மனுஷன்கிட்ட படக்குனு நீ சொல்ல வேண்டியதுதானே!”
“அம்மா! அதைச் சொல்ல வேண்டியது நானில்லை! உன் பிள்ளை!”
“சொல்லமுடியாம மனசு புழுங்கித்தாளே மயக்கம் வந்திருக்கு!”
“அவர்கிட்ட சொல்ல முடியாம அண்ணனுக்கு மனசு புழுங்கலை நம்மகிட்ட சொல்ல முடியாம தவிக்கறான்!”
“அப்படியா சொல்ற?”
“ஏறத்தாழ உன் பிள்ளையே இதை அப்பட்டமா எங்கிட்ட சொல்லியாச்சும்மா!” அம்மாவின் கண்களில் அதிர்ச்சி எட்டிப்பார்த்தது.
அருண் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டான்.
நீரஜாவின் அப்பா வந்து பில் கட்டிவிட்டார். வந்தனாதான் கூட இருந்தாள். அருணைப்பிடித்து வந்து நீரஜா காரில் ஏற்ற, வந்தனாவையும் ஏறிக்கொள்ளச் சொன்னார்.
கார் அருண்வீட்டு வாசலில் நின்றது.
வந்தனா இறங்கினாள்
“உள்ள வாங்க!” வரவேற்றாள்.
இருவரும் வர, “உட்காருங்க! அம்மா! காபி போடு!”
அம்மா கடுப்புடன் உள்ளே வந்தாள்.
“அது ஒண்ணுதான் குறைச்சல்!”
“ஷ்! சொன்னதைச் செய்மா!”
“நீங்க போய் படுங்க அருண்! ஹெல்ப் பண்ணும்மா!”
நீரஜா அவனுடன் வந்தாள். அவனைப் படுக்க வைத்துவிட்டு திரும்பிவர, அம்மா காபியுடன் வந்தாள்.
ட்ரேயை நீரஜாவிடம் நீட்ட,
அவள் காபியை எடுப்பதற்குள், திடீரென குறுக்கே புகுந்த கீர்த்தனா, காபியை எடுத்துவிட்டாள்.
அவள் அதை எடுத்த வேகத்தில் கோப்பையில் காபி வேகமாகத் தளும்பி, நீரஜாவின் சுடிதாரில் கொட்டிவிட்டது.
“இடியட்!”
நீரஜா பளாரென கீர்த்தனாவை அறைந்தாள்.